Tag: முறுக்கு சீடை செய்வது எப்படி

  • நொறுக்கு தீனியாக உப்பு சீடை செய்வது எப்படி?

    சின்ன வயசுல இருந்தே வீட்டில் நிறைய பலகாரங்கள் சாப்பிடுபவர்கள் உண்டு. கடையில் வாங்கும் உப்பு சீடை எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் செய்யப்படும் முறுக்கு சீடை வாசனை வித்தியாசமானது. அப்படிப்பட்ட சுவையான மல்டி ஸ்பைசி உப்பு சீடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

    தேவையானவை :

    பச்சரிசி – 4 டம்ளர்

    உளுந்தம் பருப்பு – 1/2 டம்ளர்

    கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் – 100 கிராம்

    உப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

    மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

    சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் மூடி – 1

    தண்ணீர் – மாவு பிசையும் அளவு

    சமையல் எண்னெய் – 1/2 கிலோ

    செய்முறை :

    பச்சரிசியை களைந்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்த அரிசியை நன்கு வடிய வைத்து, நிழலில் உலர்த்தவும்.

    லேசாக ஈரப்பசையுடன் இருக்கும் உலர்ந்த அரிசியை (பிடித்தால் பிடிக்க வரும், விட்டாலும் உலர்ந்து விடும் பக்குவம்) மிஷினில் மாவாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.

    சலித்த மாவை வெறும் வாணலியில் லேசான சிவப்பு நிறத்தில் வறுத்துக் கொள்ளவும். மீண்டும் சலித்துக்கொள்ளவும்.

    உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து மிஷினில் மாவாக அரைத்துக் கொண்டு, சலித்து வைத்துக்கொள்ளவும்.

    கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வடிய வைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும்.

    அரிசி மாவு, உளுந்து மாவு ஊற வைத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உப்பு தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு, வெண்ணெய்யையும் சேர்க்கவேண்டும்.

    சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து பிசையவும். அதிகமாக நீர் விட்டால் ‘மொழுக்’ என்று இருக்கும். ஆகையால் பிசறினாற்போல் இருக்க வேண்டும். அதே சமயம் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.

    பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு துணியில் அல்லது பேப்பரில் பரவலாகப் போடவும். எண்ணெய் காயவைத்து ஈரப்பசை கொஞ்சம் குறைந்தவுடன் முதலில் ஓரிரண்டு சீடைகளை போட்டு வெடிக்காமல் இருந்தால் மீதமுள்ள சீடைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எடுக்கவும்.