Tag: how to make mutton gravy

  • கொங்குநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி?

    பொதுவாக மட்டன் வாங்கி, ஒரே மாதிரியான மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி தான் செய்வோம். ஒரே மாதிரியான மட்டன் குழம்பு செய்வது வீட்டில் போர் இல்லையா?

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான சமையல் முறை உண்டு. செட்டிநாடு, கொங்கு நாடு, மதுரை ஸ்பெஷல் என பலவகையான சமையல் முறைகளை கையாளுகின்றனர்.

    ஒவ்வொன்றும் ஒரு தனி சுவை மற்றும் மணம் கொண்டது. எனவே இன்று நாம் பார்க்கப் போவது மிகவும் பிரபலமான கொங்கு மட்டன் குழம்பு.

    இதன் சுவை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும். மேலும், அடிக்கடி இந்தக் குழம்பைக் கேட்பார்கள். இன்றைய பதிவில் மண்ணின் சுவையுடன் கொங்கு நாட்டு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    மசாலா அரைக்க

    சின்ன வெங்காயம் -200 கிராம்

    பூண்டு- 10 பல்

    சீரகம் 2 ஸ்பூன்

    மிளகு 1 ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் 10

    தனியா -1 ஸ்பூன்

    துருவிய தேங்காய் -1 கப்

    குழப்பு செய்ய

    மட்டன்-1/2 கிலோ

    சின்ன வெங்காயம் -200 கிராம்

    பச்சை மிளகாய் -2

    சோம்பு- 1/2 ஸ்பூன்

    பூண்டு- 10 பல்

    மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

    கருவேப்பிலை 1 கொத்து

    எண்ணெய் தேவையான அளவு

    தண்ணீர் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    மல்லி தழை சிறிது

    செய்முறை

    கொங்குநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி:

    முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும், அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் தனியா சேர்த்து மணம் வரும் வரை வறுத்துக் கொண்டு அதனை ஆற விட்டு ஒரு மிக்சி ஜாரில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் இதனையும் மிக்ஸி ஜாரில் மாற்றிவிட்டு , ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், அதில் சோம்பு, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொண்டு நன்றாக வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் மட்டனை சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வேகவைத்து விட்டு அதனுடன் அரைத்த வைத்துள்ள மசாலா சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்து கொண்டு உப்பு சேர்த்துக் நன்றாக கிளறி விட வேண்டும்.

    பின்பு குக்கரை மூடி விட்டு சுமார் 7 முதல் 8 விசில் வரும் வரை, அடுப்பை மிதமான தீயில் வைத்து , வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

    8 விசில் வரை வெந்த பின் அடுப்பை அணைத்து விட்டு ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து குழம்பில் சிறிது சிறிது மல்லி தழையை சேர்த்து கிளறிவிட்டால் அருமையான கொங்கு நாடு மட்டன் குழம்பு ரெடி!

    மட்டன் மூலம் மட்டன் சுக்கா செய்யலாமே!

  • மட்டன் குழம்பு வைப்பது எப்படி?

    அசைவம் இருந்தாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறும். அசைவத்தில் உள்ள அனைத்தும் எல்லோருக்கும் விரும்பத்தக்கவை என்று அவசியமில்லை.

    சிலருக்கு சிக்கன், மீன், இறால், நண்டு போன்றவை பிடிக்கும்.ஆனால் சிலருக்கு மட்டன் பிடிக்காது, சிலருக்கு மட்டன் கிரேவி பிடிக்கும். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த பேக்கேஜில் மட்டன் கிரேவியை மிகவும் சுவையாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் – தேவையான அளவு

    மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 3 சிட்டிகை

    இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு – சிறிதளவு

    எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

    பட்டை – 3

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 4

    ஸ்டார் பூ – 1

    மல்லி – 3 டேபிள் ஸ்பூன்

    மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    தோல் சீவிய இஞ்சி – 1

    தோல் உரித்த பூண்டு – 10

    நறுக்கிய வெங்காயம் – 1

    சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை – 2

    நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் – 2

    சிகப்பு மிளகாய் – 3

    நறுக்கிய தக்காளி – 1

    தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் குழம்பு வைப்பது எப்படி:

    ஒரு பௌலில் தேவையான அளவு மட்டன் எடுத்து அதை சுத்தபடுத்தி கொள்ளவும்.

    பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் 3 சிட்டிகை, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், உப்பு சிறிதளவு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதை ஒரு 10 நிமிடம் அப்படியே ஊறவைக்கவும்.

    பிறகு ஒரு மிக்சி ஜாரில் பட்டை 3, ஏலக்காய் 3, கிராம்பு 4, ஸ்டார் பூ 1, மல்லி 3 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடியாக்கி கொள்ளவும்.

    பின்னர் அரைத்து வைத்த பொடியுடன் பச்சை மிளகாய் 2, தோல் சீவிய இஞ்சி 1, தோல் உரித்த பூண்டு 10, நறுக்கிய வெங்காயம் 1 மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு சீரகம் அரை டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை 2, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2, சிகப்பு மிளகாய் 3 சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்பு மிக்ஸ் செய்து வைத்திருக்கும் ஆட்டுகறியை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.

    10 நிமிடம் கழித்து அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 40 நிமிடம் வேகவைக்கவும்.

    40 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான ஆட்டுக்கறி குழம்பு தயார்.

  • மணக்கும் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

    பருப்பு குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவாகும். தமிழக மக்களின் அன்றாட உணவில் பருப்பு குழம்புக்கு முக்கிய இடம் உண்டு.

    இவற்றில் நமது உடலுக்கு மிகவும் தேவையான புரதச்சத்து அதிகம் உள்ள பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பு போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது.

    துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பு குழம்பு செய்வதும் மிகவும் எளிது. எந்தவொரு கடினமான நடைமுறையையும் பின்பற்றாமல் மிக எளிதாக இதைச் செய்யலாம்.

    சமைக்காதவர்கள் கூட முதல் முறை மிக எளிதாக செய்யலாம். மேலும் இந்த பருப்பு குழம்பை வாரம் ஒருமுறை தவறாமல் செய்து வந்தால், அது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    150 கிராம் பாசி பருப்பு

    100 கிராம் துவரம் பருப்பு

    2 பெரிய வெங்காயம்

    3 தக்காளி

    8 பல் பூண்டு

    2 பச்சை மிளகாய்

    2 காய்ந்த மிளகாய்

    1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    ½ மேஜைக்கரண்டி கடுகு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

    1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

    15 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒன்னே முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் ஊற வைத்திருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பை நன்கு கழுவி போடவும். (தண்ணீர் சரியான அளவு ஊற்ற வேண்டும் அதிகமாக ஊற்றி விடக்கூடாது.)

    அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து மூடி போட்டு அதை சுமார் 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு விசில் முழுமையாக போனதும் குக்கர் மூடியை திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை நன்கு மசித்து விடவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். (நெய்யை விரும்புவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யையும் சேர்த்து கொள்ளலாம்.)

    எண்ணெய் சுட்ட பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கலந்து விட்டு பருப்பு குழம்பை சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பருப்பு குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.