Tag: How To Make Pannu Parotta

  • மென்மையான சில்லி பரோட்டா செய்வது எப்படி?

    சில்லி பரோட்டா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான உணவாகும். குறிப்பாக தென்னிந்தியாவில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பராட்டா பிரியர்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். பரோட்டா என்றால் மதுரையை தான் சொல்வார்கள். அதன்படி, சில்லி பரோட்டா, கொத்து பரோட்டா மதுரை மாநகரில் தோன்றியதாக சொல்வார்கள்.

    சில்லி பரோட்டா தயாரிப்பது கொஞ்சம் சிக்கலான வேலையாக இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் அதை விரும்புபவர்கள் கூட சிறிய கடைகள் அல்லது உணவகங்களில் ஆர்டர் செய்து ருசிப்பார்கள். ஆனால் இன்னும் சிறிது நேரம் எடுத்தாலும் இதை வீட்டில் எளிதாக செய்யலாம் என்பது பலருக்குத் தெரியாது.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் வீட்டிலேயே சில்லி பரோட்டாவை எளிதாக செய்யலாம் மற்றும் உங்கள் குடும்பத்தை ஈர்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    2 கப் மைதா மாவு

    3 மேஜைக்கரண்டி பால்

    1 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    ½ பச்சை குடை மிளகாய்

    ½ சிவப்பு குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி தனியா தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    2 மேஜைக்கரண்டி டொமேட்டோ கெட்சப்

    1 மேஜைக்கரண்டி சர்க்கரை

    தேவையான அளவு வெண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவை போட்டு பின்பு ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டு பின்பு மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு பிணையவும். (தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கவனமாக சேர்க்க வேண்டும், அதிகமாக சேர்த்து விடக்கூடாது.)

    அடுத்து இந்த மாவை நன்கு அழுத்தி பிணைவதற்காக ஒரு பெரிய தட்டை எடுத்து அதை திருப்பி போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை தடவி கொள்ளவும்.

    பின்பு இந்த மாவை அதில் வைத்து நன்கு தேய்த்து சுமார் 15 நிமிடம் வரை பிணையவும்.

    15 நிமிடம் தேய்த்த பிறகு மாவின் மேலே சிறிதளவு எண்ணெய்யை தடவி அதை அப்படியே ஒரு மூடி போட்டு சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்பொழுது மாவை தேய்த்த தட்டில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒரு உருண்டையை அதில் வைத்து கைகளால் தட்டி அதை நன்கு பெரிதாக விரித்து விடவும்.

    பின்பு அதன் மேலே சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து ஒரு கத்தியின் மூலம் செங்குத்தான வாக்கில் அதில் கோடுகளை போடவும்.

    கோடுகளை போட்ட பின் அதை அப்படியே புரட்டி நீள வாக்குக்கு கொண்டு வந்து அதை பாம்பு போல சுருட்டி ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள உருண்டைகளையும் செய்து சுருட்டி வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுடுவதற்குல் சுருட்டி வைத்திருக்கும் மாவை தேய்த்து எண்ணெய் சுட்டதும் அதை pan ல் போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு அது வெந்ததும் அதை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    பின்பு அது ஆறியதும் அதை நம் கைகளின் மூலம் சிறு சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை போட்டு இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, மற்றும் குடை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 நிமிடம் வரை வதக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதில் தனியா தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 நிமிடம் வரை வதக்கவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் டொமேட்டோ கெட்சப் மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் பிய்த்து வைத்திருக்கும் பரோட்டாவை போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை நன்கு கலந்து விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி சில்லி பரோட்டாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை ஆனியன் ரைத்தா உடன் சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சில்லி பரோட்டா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.