Tag: Rotukada Spicy Chutney

  • ரோட்டுக்கடை காரச் சட்னி செய்வது எப்படி?

    காலையில் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லியுடன் என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? ஆனால் சட்னி செய்ய உங்கள் வீட்டில் தேங்காய் இல்லையா? அதனால் கவலைப்பட வேண்டாம்.

    தேங்காய் சேர்க்காமல் தேங்காய் இல்லாத ரோட்டுக்கடை கார சட்னி செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கார சட்னியை செய்யலாம்.

    தேங்காய் இல்லாமல் ரோட்டுக்கடை கார சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? படித்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    எண்ணெய் – 1 டீஸ்பூன்

    வரமிளகாய் – 7

    பூண்டு – 6 பல்

    இஞ்சி – 1 இன்ச் துண்டு

    கறிவேப்பிலை – 1 கொத்து

    சீரகம் – 1 டீஸ்பூன்

    புளி – சிறிய துண்டு

    பொட்டுக்கடலை – 1 1/2 கப் அல்லது 150 கிராம்

    பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

    உப்பு – 1 டீஸ்பூன்

    தண்ணீர் – தேவையான அளவு

    தாளிப்பற்கு…

    எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் – 1

    கடுகு – 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

    சீரகம் – 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை – 1 கொத்து

    கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

    செய்முறை

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், பூண்டு இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் புளி சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பின் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து ஒருமுறை கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து தாளிக்கவேண்டும்.

    தாளித்த பின் அதை அரைத்த சட்னியை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னி தயார்.