Tag: செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி

  • செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி?

    சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    காளான் – 450 கிராம்

    பச்சை பட்டாணி – 3/4 கப்

    வெங்காயம் – 1 (நறுக்கியது)

    தக்காளி – 2 (நறுக்கியது)

    இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    மிளகாய் தூள் – 1 1 /4 டீஸ்பூன்

    மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

    கரம் மசாலா – 1 /4 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1 /4 டீஸ்பூன்

    கெட்டியான தேங்காய் பால் – 1 /4 கப்

    கொத்தமல்லி – சிறிது

    சீரகம் – 1 /2 டீஸ்பூன்

    உப்பு – சுவைக்கேற்ப

    எண்ணெய் – 1 1 /2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை பட்டாணியை நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியைப் போட்டு, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    வதக்கிக் வைத்திருக்கும் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிறிது நீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

    இறுதியாக தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா தயார்.

  • ஃபிஷ் பிரியாணி செய்வது எப்படி?

      பிரியாணி உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். பொதுவாக அனைவரும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செய்து ருசிப்பார்கள். ஆனால் மீன் பிரியாணியும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போன்ற ஒரு அற்புதமான பிரியாணி.

    மீன் பிரியாணி மீன் பிரியர்களுக்கு அவசியம். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போல மீன் மிருதுவாக இருப்பதினால் மீனை அதிக நேரம் வேக விட்டால் குழைந்து விடும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை சரியாகப் பின்பற்றினால், மீன் உடையாமல் சரியாக சமைக்கப்படும்.

    தேவையான பொருட்கள்:

    1/2 கிலோ மீன்

    1/2 கிலோ பாசுமதி அரிசி

    3 தக்காளி

    1 பெரிய வெங்காயம்

    3 பச்சை மிளகாய்

    1 எலுமிச்சம்பழம்

    1/4 கப் தேங்காய்

    1 கப் தேங்காய் பால்

    1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்

    மல்லித் தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    சீரக தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    சோம்பு தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    1/2 மேஜைக்கரண்டி சோம்பு

    5 துண்டு இஞ்சி

    13 பூண்டு பல்

    6 கிராம்பு

    8 ஏலக்காய்

    2 துண்டு பட்டை

    1 பிரியாணி இலை

    1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    8 to 10 முந்திரி

    எண்ணெய் தேவையான அளவு

    நெய் தேவையான அளவு

    மிளகாய் தூள் தேவையான அளவு

    சிறிதளவு புதினா

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் மீனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    பின்பு வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய், 3 ஏலக்காய், சோம்பு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது சிறு சிறு துண்டங்களாக ஆக்கி வைத்திருக்கும் மீனை ஒரு bowl ல் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

    பின்பு அதில் கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள், சோம்பு தூள், மல்லி தூள், சீரகத் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அதை சுமார் 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற விடவும்.

    25 நிமிடத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத் துமீன் பொரித்தெடுத்த எண்ணெய்யை வடி கட்டி அதில் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஒரு பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும்.

    இவை வதங்கியதும் அதில் 2 பச்சை மிளகாய், முந்திரி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மிளகுத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

    இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இந்த மசாலாவில் சேர்த்து பக்குவமாக கிளறி விடவும்.

    அரிசியை நன்கு கிளறி விட்டதும் அதில் ஒரு கப் அளவு தேங்காய் பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் மீதமுள்ள எலுமிச்சம் பழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    பின்பு குக்கரில் மூடியை போட்டு விசில் போடாமல் சுமார் 2 நிமிடம் வரை ஆவி வரும் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மூடியை திறந்து 2 கரண்டி அளவு பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் மீனை சாதத்தில் வைத்து சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.

    பின்பு தட்டில் இருக்கும் சாதத்தை அதன் மேலே போட்டு மீதமுள்ள மீன், புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி மூடி போட்டு விசில் வைத்து சுமார் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே 3 நிமிடம் வரை வைத்திருக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃபிஷ் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சுவையான பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி?

    காளான் பொதுவாக பல வழிகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதில் பெப்பர் மஷ்ரூம் கிரேவியும் ஒன்று. இவை சப்பாத்தி, பிரைடு ரைஸ், ரசம் சாதம் மற்றும் வெள்ளை சாதம் ஆகியவற்றுடன் பரிமாறுவது சிறந்தது. இதனுடன் சேர்க்கப்படும் காளானை தூள் துண்டுகளாக வெட்டி மாலை நேர சாண்ட்விச் ஸ்டஃபிங்காக பயன்படுத்தலாம்.

    காலையில் டிபனுக்கு சைட் டிஷ் ஆகவோ, மாலையில் சாண்ட்விச் ஆகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ செய்வது எளிது. காளான்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக வைட்டமின் டி, இது பெரும்பாலும் இறைச்சியில் மட்டுமே காணப்படுகிறது.

    காளான் மற்றும் மிளகு சேர்த்து செய்வதால் உடலுக்கும் மிகவும் சத்தானது. காளான்கள் சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்காததால் இவற்றைச் செய்வதும் மிகவும் எளிதானது. இப்போது மிளகு காளான் கிரேவிக்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    2 பாக்கெட் பட்டன் மஷ்ரூம்

    2 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1 துண்டு இஞ்சி

    3 பூண்டு பல்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    1 மேசைக்கரண்டி தனியாதூள்

    1 மேசைக்கரண்டி மிளகு

    1 மேசைக்கரண்டி சோம்பு

    1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    முதலில் மஷ்ரூம் ஐ ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். (இவ்வாறு செய்தால் மஷ்ரூம் வெள்ளை நிறமாக மற்றும் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.)

    அடுத்து மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மற்றும் இஞ்சி பூண்டு ஐ ஒரு மிக்சியில் போட்டு பேஸ்ட் ஆக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை மேசைக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு மேசைக்கரண்டி மிளகு சேர்த்து சோம்பு சிறிது நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும்.

    பின்பு அதை சிறுது நேரம் ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை காய விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை மற்றும் ஒரு பின்ச் அளவு உப்பையும் அதில் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் அளவிற்கு வதக்கவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
    அடுத்து அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள், தனியாத்தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பட்டன் மஷ்ரூம் ஐ சேர்த்து நன்கு பிரட்டி பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து வேக விடவும்.

    மஷ்ரூம் ஐ கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். (தேவைப்பட்டால் மட்டுமே சிறுது அளவு தண்ணீர் தெளிக்கவும் ஏனென்றால் மஷ்ரூம் தண்ணீர் விடும் தன்மை கொண்டது.)

    மஷ்ரூம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு துளை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும். பின்பு இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான பெப்பர் மஷ்ரூம் கிரேவி தயார்.

    இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    காளான் பயன்படுத்தி பல வகையான சமையல் செய்யலாம். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு காளான் பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அதுவும் செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்தால் ருசியே தனிதான். செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான் : 1/2 கிலோ

    பாசுமதி அரிசி : 2 கப்

    வெங்காயம் : 1 நறுக்கியது

    தக்காளி : 2 நறுக்கியது

    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி : 1/4 கப் (துருவியது)

    புதினா : 1/4 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் : 3 நறுக்கியது

    எண்ணெய் : 3 டேபிள் ஸ்பூன்

    நெய் : 3 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் பால் : 1/2 கப்

    தயிர் : சிறிது

    மிளகாய் தூள் : 2 டீஸ்பூன்

    சோம்பு தூள் : 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்

    தண்ணீர் : 3 கப்

    உப்பு : தேவையான அளவு

    தாளிக்க :

    பிரியாணி இலை

    ஏலக்காய்

    லவங்கம்

    கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் காளானை கழுவவும். பின்னர் அதை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.

    அதே நேரத்தில், அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.

    பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

    பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்றாக குழம்பு வரும் வரை கொதிக்கவிடவும்.

    அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் அரிசியைக் கழுவி, கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி. சைவ பிரியர்களுக்கு ஏற்ற காளான் பிரியாணி.

    இதையும் செய்துபார்க்கலாமே!: செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி!