செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி?
சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் – 450 கிராம்
பச்சை பட்டாணி – 3/4 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 1 /4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 /4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 /4 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – 1 /4 கப்
கொத்தமல்லி – சிறிது
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 1 1 /2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை பட்டாணியை நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியைப் போட்டு, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
வதக்கிக் வைத்திருக்கும் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிறிது நீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா தயார்.