காளான் பயன்படுத்தி பல வகையான சமையல் செய்யலாம். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு காளான் பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அதுவும் செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்தால் ருசியே தனிதான். செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான் : 1/2 கிலோ
பாசுமதி அரிசி : 2 கப்
வெங்காயம் : 1 நறுக்கியது
தக்காளி : 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்
கொத்தமல்லி : 1/4 கப் (துருவியது)
புதினா : 1/4 கப் (துருவியது)
பச்சை மிளகாய் : 3 நறுக்கியது
எண்ணெய் : 3 டேபிள் ஸ்பூன்
நெய் : 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் : 1/2 கப்
தயிர் : சிறிது
மிளகாய் தூள் : 2 டீஸ்பூன்
சோம்பு தூள் : 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்
தண்ணீர் : 3 கப்
உப்பு : தேவையான அளவு
தாளிக்க :
பிரியாணி இலை
ஏலக்காய்
லவங்கம்
கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் காளானை கழுவவும். பின்னர் அதை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.
அதே நேரத்தில், அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்றாக குழம்பு வரும் வரை கொதிக்கவிடவும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் அரிசியைக் கழுவி, கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும்.
இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி. சைவ பிரியர்களுக்கு ஏற்ற காளான் பிரியாணி.
இதையும் செய்துபார்க்கலாமே!: செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி!
