சமையல் ஒரு அற்புதமான கலை. ஆரோக்கியத்தில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் சில பிரச்சனைகள் வராது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை ஊட்ட விரும்பும் பெற்றோர்கள் சமையலையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் சமைப்பதை ஒரு வேலையாக பார்க்கிறார்கள். கத்தியைப் பிடிக்கத் தெரியாததாலும், வெங்காயத்தை வெட்டும்போது கண்ணில் நீர் கசிவதாலும் பலர் சமையலறையைத் தவிர்க்கிறார்கள்.
சமையல் அறையிலும், சமைக்கும் போதும் தவிர்க்க வேண்டிய தவறுகளை அறிந்தால் யாரும் சமையலறைக்குள் நுழைய தயக்கம் காட்டமாட்டார்கள்.
சமையலின் போது செய்யக் கூடாதவை
சமையலறையில் பலரும் சிரமமாக கருதும் மிக எளிதான வேலை காய்கறிகளை நறுக்குவது. காய்கறிகள் நறுக்க அல்லது வெட்ட பயன்படுத்தும் கத்தியின் பிடிப்பு வாட்டமாகவும் வெட்டும் பகுதி நீளமாகவும் இருப்பது அவசியம். கத்தி பிடிக்கும் பகுதியை விட வெட்டும் பகுதி நீளமாக இருக்க வேண்டும். பத்து ரூபாய்க்கு கிடைக்கும் கத்தியை பயன்படுத்தாதீர்கள்.
கூர்மையான கத்தி இல்லாத பட்சத்தில் அருகமனை பயன்படுத்துவது நல்லது.
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகம் செய்யாதீர்கள்.
பூரி சுடுவதற்கு பயன்படுத்திய் எண்ணெய்யை தோசை ஊற்ற பயன்படுத்துவது, கடுகு தாளிப்புக்கு ஊற்றுவது என இவை அனைத்துமே தவறு.
உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் Trans fat உண்டாகும். இதை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.
பூரி சுடுவதற்கு, அப்பளம் பொரிப்பதற்கு சின்ன கடாய் பயன்படுத்தி எண்ணெய்யை மிச்சம் செய்யலாம்.
கேசரி பவுடர் உபயோகிப்பதை தவிர்க்கவும். இது முழுக்க முழுக்க நிறமி மட்டுமே. இதனால் எந்த பயனும் கிடையாது.
சமையலுக்கு பயன்படுத்தும் பேன் டெஃப்லான் கோட்டிங் செய்யப்பட்டதாக பயன்படுத்தாதீர்கள். இது உடல் நலனுக்கு கேடு.
காய்கறி வேக வைத்த பிறகு அந்த தண்ணியை கீழே ஊற்றி வீண் செய்யாமல் சப்பாத்தி மாவு பிசைய, சாம்பார் வைக்க பயன்படுத்தலாம். இதனால் காய்கறிகளில் இருந்து கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து வீண் ஆகாது.
இறைச்சியை கடைகளில் இருந்து வாங்கி வந்த பிறகு அதை அன்றே சமைத்துவிடுங்கள். பிரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து பாதி சமைத்துவிட்டு மீதி பாதியை உள்ளே வைப்பது அல்லது முழுவதையும் சமைத்து மிச்சத்தை பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் கழித்து சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு. இதனால் தான் உணவு நஞ்சாக மாறுகிறது.
வெங்காயத்தை குளிர்ந்த நீரில் கழுவி வெட்டினால் கண்களில் இருந்து தண்ணீர் வராது.
