பொதுவாக தோசை அனைவருக்கும் பிடிக்கும். அடை தோசை என்று சொல்லவே வேண்டாம். அரிசி, பருப்பு, மிளகாய் சேர்த்து தோசை மாவு போல் ஊற்றினால், எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இவ்வளவு அற்புதமான சுவையுடன் கூடிய இந்த அடை தோசையை அனைவரும் செய்யும் வகையில் மிக எளிதான முறையில் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள் :
இட்லி அரிசி – ஒரு டம்ளர்
பச்சரிசி – முக்கால் டம்ளர்
துவரம் பருப்பு – முக்கால் டம்ளர்
உளுந்து – முக்கால் டம்ளர்
கடலைப்பருப்பு – முக்கால் டம்ளர்
வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வரமிளகாய் – 6
கட்டி பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
அடை தோசை செய்ய முதலில் பருப்பு மற்றும் அரிசி வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டபடி எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தானியங்கள் எல்லாம் சேர்த்து உள்ளதால் அடை தோசை ஆரோக்கியம் மிகுந்தது எனவே இதனை வாரம் ஒரு முறை ஆவது செய்து சாப்பிட்டால் நலம் பெருகும்.
ஒரு பெரிய பாத்திரத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் அளவிற்கு ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா அளவுகளும் இதே டம்ளரை வைத்து அளந்து கொள்ளுங்கள்.
முதலில் ஒரு டம்ளர் முழுவதுமாக இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். மீதி எல்லா பொருட்களையும் முக்கால் டம்ளர் அளவிற்கு அளந்து எடுக்க வேண்டும்.
பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை அளந்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றை நன்கு ஓரிரு முறை அலசி நல்ல தண்ணீரை ஊற்றி குறைந்தது 2 மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.
2 மணி நேரம் கழித்து கிரைண்டரை கழுவி அதில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு துண்டு கட்டி பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சில பருப்பு வகைகள் வாய்வு என்பதால் சீரகம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்தால் வாய்வை எடுத்துவிடும்.
இவற்றுடன் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து ஊற வைத்துள்ள அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரவென மாவை அரைக்க வேண்டும்.
அதிகபட்சம் 20 நிமிடத்தில் நன்கு மாவு கொரகொரவென்று அரைந்துவிடும். கடைசியாக பொடிபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து அடை மாவு பதத்திற்கு மாவு நன்கு கெட்டியாக அரைந்து வந்ததும் அதனை எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
கிரைண்டர் கழுவிய தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.
ஒரு மணி நேரத்தில் மாவு நன்கு புளித்துவிடும். மாவு லேசாக புளித்ததும் கெட்டியாக இருந்தால் தேவையான அளவிற்கு கிரைண்டர் கழுவிய தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.
நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து கலந்து தோசைக் கல்லை சுட வைத்து அடை போல தோசை வார்த்தால் அடை தோசை ரெடி.
மல்லித் தழையுடன் முருங்கைக் கீரையை கொஞ்சம் உருவி அலசி சேர்த்துக் கொள்ளலாம் இன்னும் ஆரோக்கியமும், சுவையும் அதிகரிக்கும்.
ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த அடை தோசையை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.
இதையும் செய்யலாமே!: ரசகுல்லா செய்வது எப்படி?
