இன்று நாம் பன்னீர் மசாலா செய்முறையைப் பார்க்கப் போகிறோம். இந்த பன்னீர் மசாலா சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி போன்றவற்றுக்கு ஒரு சிறந்த சைட் டிஷ் வைத்துக்கொள்ளலாம்.
மேலும், உணவில் பன்னீர் அதிகம் சேர்ப்பதன் மூலம், உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதுபோன்ற பன்னீர் உணவில் தொடர்ந்து சேர்ப்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
இப்போது எளிய முறையில் பன்னீர் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். படித்து சுவைத்து, எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு முறை வதக்கி, தக்காளி சேர்த்து கிளறி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 7-8 நிமிடம் வேகவிடவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், தயிர் சேர்த்து கிளறவும், மேலும் குழம்பு அதிகமாக வேண்டும் என்று விரும்பினால் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி வேக வைக்கவும்.
இறுதியில் பன்னீர் துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க வைத்தால் சுவையான பன்னீர் மசாலா ரெடி!
