சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மிளகை அரைத்து ரசம் சாப்பிடுங்க.. என்ற வார்த்தையை பலர் சொல்வதை கேட்டிருப்போம். உடலை பல வழிகளில் ஆற்றும் சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சக்தியும் ரசத்திற்கு உண்டு.

ஆனால் நம்மில் பலருக்கு ரசமா? இந்த நேரத்தில், இந்த சோதனை தேவையா? அலறி அடித்து ஓடுவோம். புளி, தக்காளி, சீரகம், மிளகு சேர்த்து செய்யும் வழக்கமான ரசத்தை வெறுப்பவர்கள் சத்தான காய்கறிகளுடன் ரசம் செய்யலாம்.

என்ன காய்கறிகள் ரசமா? என கேட்கிறீர்களா? ஆம், பீட்ரூட் ரசத்தில் புரதம், நீர்ச்சத்து, ஒமேகா 3 அமிலங்கள், நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு சக்தியைத் தரும். அதை எப்படி செய்வது என்பது இங்கே காணலாம்? அதற்கான சில எளிய குறிப்புகள் இதோ…

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2

தக்காளி – 2

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகு- அரை டீஸ்பூன்

உப்பு – சுவைக்கு ஏற்ப

தேங்காய் எண்ணெய் – சிறிதளவு

கடுகு, கறிவேப்பிலை – தாளிப்பிற்கு ஏற்ப

செய்முறை

உடலுக்கு வலுச்சேர்க்கும் பீட்ரூட் ரசம் செய்வதற்க முதலில் பீட்ரூட்டை தோலுரித்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைக்க வேண்டும்.

கொஞ்சம் அரைத்தவுடன் தக்காளி மற்றும் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பீட்ருட் ரசம் செய்வதற்கான கலவை ரெடி.

இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,, பெருங்காய தூள் போட்டு தாளித்த பின்னதாக அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும்.

லேசாக வதங்கியதும் போதுமான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

வழக்கம் போல ரசத்தைக் கொதிக்க விடாமல், நுரை கட்டி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு நறுக்கிய மல்லி இலைகளைத் தூவி விட்டால் போதும். சுவையான பீட்ருட் ரசம் ரெடி.