பாலக்கீரை பக்கோடா செய்வது எப்படி?

பக்கோடா என்பது நம்மில் பலருக்கு விருப்பமான உணவு. பொதுவாக வெங்காய பக்கோடா, காலிபிளவர் பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா, முந்திரிப் பருப்பு பக்கோடா என்று சுவைக்கத்தான் செய்கிறோம். ஆனால் இன்று நாம் காண இருப்பது வித்தியாசமான சத்தான பாலக் கீரை பக்கோடா.

நம்மில் பலர் மாலையில் சூடான டீ அல்லது காபியுடன் பக்கோடா சாப்பிட்டு மகிழ்வோம். நாம் வழக்கமாக செய்யும் பக்கோடாவுக்கு பதிலாக சத்தான பக்கோடா சாப்பிடுவது எப்படி?

பாலக் கீரையின் சத்துக்கள் மற்றும் பக்கோடாவின் மொறுமொறுப்புடன், இந்த பாலக் கீரை பக்கோடாக்கள் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்

1 கட்டு பாலக் கீரை

1/2 cup அரிசி மாவு

1 cup கடலை மாவு

2 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1/2 tsp மஞ்சள் தூள்

1 tsp மிளகாய் தூள்

1 tsp ஓம விதைகள்

1/2 tsp பெருங்காய தூள்

1 சிறு துண்டு இஞ்சி

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு கருவேப்பிலை

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு நன்கு கிளறி விடவும்.

பின்பு அதில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓம விதைகள், பெருங்காய தூள் மற்றும் 1 tsp அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை நாம் செய்து வைத்திருக்கும் கலவையில் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.

அடுத்து அதில் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நம் கைகளின் மூலம் அதை நன்கு கிளறி விடவும்.

இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடானதை உறுதி செய்த பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் பக்கோடா மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து அதை கவனமாக எண்ணெயில் உதிர்த்து விட்டு அது ஒருபுறம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

ஒருபுறம் பொன்னிறமானதும் அதை மறுபுறம் ஒரு கரண்டியின் மூலம் திருப்பிவிட்டு அந்தப் புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

கடைசியாக கருவேப்பிலையை உருவி அந்தப் பக்கோடாவுடன் போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான பாலக் கீரை பக்கோடா ரெடி. அதை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Reply

Previous Post

Next Post

Discover more from Dad's Kitchen

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading